மட்டக்களப்பு, ஏறாவூர் மீராகேணி ஸக்காத் கிராமத்தில் தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (வியாழக்கிழமை) பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீராகேணி ஸக்காத் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா தஸ்னிகா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
பெரிய வாளிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அதில் இந்தக் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் குளித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது, இந்தக் குழந்தை தண்ணீரினுள் அமிழ்ந்து மூச்சுத் திணறியுள்ளது.
குளித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் அலறல் கேட்டு வீட்டார் ஓடிச் சென்று, தண்ணீரினுள் அமிழ்ந்து கிடந்த இந்தக் குழந்தையை மீட்டெடுத்து, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், அவ்வேளையில் குழந்தை உயிரிழந்து காணப்பட்டது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments:
Post a Comment