தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு திறைசேரியால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து, அரச தாதி உத்தியோகத்தர் சங்க யாழ். போதனா வைத்தியசாலை கிளையினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் 1 மணிவரை முன்னெடுக்கப்பட்டது. தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியபோதும், அதனை திறைசேரி இன்னும் வழங்கவில்லையென தாதி உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்தோடு, கடந்த காலத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட பதவி உயர்வை, தற்போது பத்து வருடங்களாக மாற்றியுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாம் மூன்றாம் தரத்திற்கு தரமுயர்த்தப்படுவதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் எனவும் அதனை ஆறு வருடங்களுக்கு மாற்றியமைத்து தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், தாதிய பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர்களுக்கு சுகாதார அமைச்சின் நிர்வாக பொறுப்புகளில் உரிய பதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 comments:
Post a Comment