மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த மண்டபம் இடிந்து விழுந்ததில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளதுடன் கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர்.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் மண்டப கட்டடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின்போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக எட்டு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அல்மேரா தெரிவித்தார்.
தொடர்ந்து காயமடைந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதுடன், மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



0 comments:
Post a Comment