யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆன்மீகச் சொற்பொழிவாளர் சைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார்!


யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆன்மீகச் சொற்பொழிவாளர் சைவப்புலவர் நித்திய தசீதரன் (நித்தியானந்தம் தசிதரன்) சற்று முன்னர் (13.05.2017 சனிக்கிழமை காலை 6.45) காலமாகிவிட்டார் 

நேற்று முன்தினம் (11.05.2017) சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவருக்குத் திடீரென சுவாசம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகவும் அறிந்தேன். இன்று காலை அவர் முருகன் திருவடிகளை அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் இளைய தலைமுறைப் பேச்சாளர்களுள் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய திறன் வாய்ந்தவர் சைவப்புலவர் நித்திய தசீதரன். அமைதியான ஆற்றொழுக்கான அவரது பேச்சு பலரையும் வசீகரிக்கும் தன்மை படைத்தது. அவருடைய ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கு ஓம் தொலைக்காட்சி சிறந்த களத்தை வழங்கியிருந்தது. சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளின் அன்புக்குப் பாத்திரமானவராகவும் அன்னவர் விளங்கினார். யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் நேரடி வர்ணனைகளை மேற்கொண்டிருந்தார்.

நான் அவருடன் மேடையேறிய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தாலும் என்மீதும் அவர் அபிமானம் கொண்டிருந்தார். இளம் குடும்பத்தரான அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அவருடை இறுதிச் சடங்கு 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை காலை பன்னாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தகவல் - லலீசன் 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment