யாக்கை – திரை விமர்சனம்


‘கழுகு’ கிருஷ்ணா கதாநாயகராக நடிக்க, ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி நாயகியாக நடிக்க, ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம் வில்லனாக நடிக்க பிரகாஷ்ராஜ், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி… உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் குழந்தைவேலப்பனின் இயக்கத்தில் “ப்ரிம் பிக்சர்ஸ்” பேனரில் முத்துக்குமரன், பிரமாண்டமாக, தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “யாக்கை”.

தனியார் மருத்துவதுறையில் அரிய வகை இரத்தம், மற்றும் உடல் உறுப்புகள் உள்ளிட்டவைகளுக்காக மக்களின் உயிரோடு விளையாடும் படியாக சில, பல இடங்களில் நடைபெறும் மருத்துவதுறை குற்றங்களை பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் “யாக்கை”.

படத்தின் கதைப்படி, கிருஷ்ணாவின் காதலி சுவாதியை அவரது அரிய வகை இரத்தத்திற்காக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இயங்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை முதலாளி தன் ஆட்கள் மூலம் போட்டுத் தள்ளி செமயாய்துட்டு பார்க்கிறார்.

இதில் வெகுண்டெழும் ஹீரோ, வில்லன் குருசோமசுந்தரத்தை எவ்வாறு புரட்டி எடுக்கிறார்? இந்த கேஸில் போலீஸ் பிரகாஷ்ராஜ் எவ்வாறு துப்பு துலக்குகிறார் என்பதும் தான் “யாக்கை” படத்தின் கதையும், களமும்!

கல்லூரி வாலிபராக, காதலராக, புரட்சி இளைஞர் கதிராக கிருஷ்ணா செம கச்சிதம். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸையும், ஆக்ஷன் காட்சிகளில் உடம்பில் கூடுதல் வலுவையும் காட்டி மிரட்டியிருக்கும் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்.

கதாநாயகியாக, கவிதாவாக சுவாதி கண்களாலேயே நடித்து கிருஷ்ணாவையும் கவர்ந்து, காண்போரையும் வசீகரிப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது! அதே மாதிரி, அவருக்கு க்ளைமாக்ஸில் ஏற்படும் நிலை கொடூரம்… என்பது பச்சாதாபத்தை கூட்டுகிறது!

நாயகர் கிருஷ்ணாவின் நண்பர்களாக வரும் மெல்வின், நூர் – ஹரிகிருஷ்ணா, உள்ளிட்ட புதுமுக நடிகர்களும், வில்லனாக வரும் “ஜோக்கர்” குருசோமசுந்தரம் அவரது டாக்டர் அப்பாவாக வரும் ராதாரவி, புலணாய்வு போலீஸ் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணாவின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர், காமெடி போலீஸ் சிங்கம் புலி… உள்ளிட்ட பழகிய முகங்களான நட்சத்திர பட்டாளமும், அவர்களது நடிப்பும் படத்திற்கு பக்கபலம்.

சாபு ஜோசப் பின் படத்தொகுப்பில், இன்னும் கொஞ்சம் அவரது கத்திரி, வேண்டாத சீன்களில் விளையாண்டிருக்கலாம். எட்வர்ட் கலைமணியின் கலை இயக்கம் கனகச்சிதம்.

சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு, பல காட்சிகளில் அழகிய ஓவியப்பதிவு.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “என்னுள்ளே ஏன் சலனம்…”, ” “நான் இந்த காற்றில்..”,” எந்தன் இறுதி மூச்சு…” உள்ளிட்ட சுபராக பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ற மிரட்டல்.

குழந்தைவேலப்பனின் இயக்கத்தில், ஒரு சில, லாஜிக் குறைகள் மேஜிக் காக தெரிந்தாலும், இருந்தாலும், “பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவத்துறையின் தகிடுதத்தங்களை படம் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருப்பது போற்றுதலுக்குரியது.

“அதே சமயம், அதை இன்னும் கொஞ்சம் கூடுதலாக புரியும்படியும் பட மாக்கியிருந்தால் “யாக்கை – மேலும், பெருவாரியான தமிழ் சினிமா ரசிகர்களின் வாக்கை பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் இன்னும் கூடுதலாக நிலைத்திருக்கும்!

ஆக மொத்தத்தில், ஒரு சில சின்ன, சின்ன, குறைகள்ஆங்காங்கே தெரிந்தாலும், “யாக்கை’ – ‘நம்பிக்கை!”
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment