காற்று வெளியிடை - திரை விமர்சனம்!


1999-ம் ஆண்டின், கார்கில் போரின் போது, பாகிஸ்தான், இராணுவத்திடம் சிக்கி அந்நாட்டு சிறை கொட்டகையில் சித்ரவதைப்படும் ஒரு இந்திய விமான பைலட்டின் காதல் மாண்டதா? மீன்டதா..? என்னும் கருவுடன் கார்த்தி, அதீதி ராவ் ஹைதி, ருக்மினி விஜயக்குமார், RJ பாலாஜி, டெல்லி கணேஷ், லலிதா கே பி.ஏ.சி... ஆகிய பிரபலங்கள் நடிக்க, மணித்னத்தின் இயக்கத்திலும் "மெட்ராஸ் டாக்கீஸ்" தயாரிப்பிலும் உருவாகிட, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடு செய்திருக்கும் படம் தான் "காற்று வெளியிடை".

கதைப்படி, கோபமும், முரட்டுத்தனமும் நிரம்பிய இளம் ஏர்போர்ஸ் பைட்டர் பிளைட் பைலட்டிற்கும் விபத்தில் அடிபட்ட அவரை காப்பாற்றும் ஒரு இளம் பெண் டாக்டருக்குமிடையே ஏற்படும் காதல், அவர்களது கோபதாபங்களைத் தாண்டி வளர்ந்து வரும் வேளையில் 1999 ம் ஆண்டில் கார்கில் போர் வருகிறது.

அதில் பறந்து பாய்ந்து சென்று விபத்தில் சிக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து உயிர் தப்பும் அந்த வீரர், பாகிஸ்தான் இமயமலை பகுதியில் விழுந்து அந்நாட்டு சிறை கொட்டை கையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.

அவர் மீண்டு வந்து தடை பல கடந்துதன் காதலியின் கரம் பிடித்தாரா? இல்லையா...? என்பது தான் "காற்று வெளியிடை" படத்தின் மொத்தக் கதையும்.

படத்தில் நம் இந்திய எல்லையோர விமான படை தளங்களையும், போர் விமானங்கள் காது கிழிய உயர, உயர பறக்கும் விதத்தையும், இமாச்சல பனிப் பிரதேசங்களையும் மிக அழகாகவும், தத்ரூபமாகவும் படம் பிடித்திருக்கும் விதம் ரசனை ஒவ்வொரு சீனிலும் மணிரத்னத்தின் பாணி பக்காவாக பளபளக்கிறது என்பது இப்படத்திற்கு பெரும் பலம்.

படத்தில், வி.சி எனும் பைட்டர் பிளைட் பைலட் வருண் சக்ரபாணியாக கார்த்தி, ஏர்போர்ஸ் ஆபிஸராக செம மிடுக்கும், துடுக்கும் காட்டியிருக்கிறார்.

"உன் குரல் கேட்க ஆரம்பிச்சுடுச்சு..., உன் வாசம் வர ஆரம்பிச்சுடுச்சு... உன் சிரிப்பு, உன் சந்தோஷம்... "என பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் கார்த்தி, காதலியை நினைத்து புலம்பும் இடங்களும், க்ளைமாக்ஸில் பாக் - ஆப்கானிஸ்தான் பார்டரில் ஒரு சரக்கு லாரியில் பாக் மிலிட்டரி வண்டிகளை துவம்சம் செய்து விட்டு ஆப்கான் பார்டரில் நுழைந்து தப்பும் இடங்களிலும் செமயாய் மிரட்டி இருக்கிறார் கார்த்தி.

"இரண்டு நாளா கவர்மென்ட் ஆபிஸ் முன் ஒரு ஏர்போர்ஸ் ஆபிஸருக்காக..... காத்திருந்தேன். ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல... நான் தான் முட்டாள் நீ என்னை கீழ போட்டு மிதிக்கிற... நான் ஏன் திரும்ப திரும்ப உன் கிட்டே வரேன்... என்பது தெரியல... "என தன்னை திருமணம் செய்வதாக ரிஜிஸ்தர் ஆபிஸ்வரச் சொல்லி காக்க வைத்து கடமையே கண்ணாக இருந்து, மறந்த, கார்த்தியிடம் புலம்பும் இடங்களில் செமயாய் நடித்திருக்கிறார்.

தமிழுக்கு அறிமுகமாகும் அதீதி ராவ் ஹைதி.அம்மணி, காஷ்மீர் - ஸ்ரீநகர் வந்ததும் தான் பார்க்கும் முதல் ஆளாக, விபத்தில் சிக்கி, ஜி.ஹெச் வரும் கார்த்திக்கு சிகிச்சை தரும் டாக்டர் லீலா ஆபிரகாமாக அதீதி ராவ் ஹைதி, புது வித நடிப்புக் காட்டியிருக்கிறார். போகப் போக இவருக்கு, அவரும், அவருக்கு இவரும் புதிதல்ல... ஏற்கனவே அறிமுகமானவர்கள்... என போகும் காட்சிகள் எதிர்பாரா திருப்பம்.

நர்ஸ் அச்சம்மா வாக லலிதா கே பி.ஏ.சி, டாக்டர். நிதியாக, நாயகியின் தோழியாக வரும் ருக்மினி விஜயக்குமார் நாயகியின் தாத்தாவாக ரிட்டயர்டு கர்னல் மித்ரனாக டெல்லி கணேஷ், நாயகியை ஒன் சைடாக லவ்வும் மிலிட்டரி டாக்டர் இலியாஸ் ஹூசைனாக, காமெடி பாலாஜி ஆகிய அனைவரும் பக்கா.

தொழில்நுட்பகலைஞர்களில், ஈ.காலகானியின் படத்தில் இடம் பெறும் நட்சத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு, செம கலர்புல், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, காதல் காட்சிகளில் சற்றே நீள நீளமாகத் தெரிந்தாலும் பக்கா தொகுப்பு ரவிவர்மன். எஸ்ஸின் ஒளிப்பதிவில், எக்கச்சக்கமாய் இந்தியாவின் எல்லையோர பகுதிகளின் இயற்கை அழகும், பைட்டர் விமானங்கள் சர், புர் என்று பறக்கும் அழகும் படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் விதத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "வான் வருவான்... ", "நல்லாய் அல்லாய்...", "அழகே...", "சாரட்டுவண்டியிலே....", "ஜூ கினி..." உள்ளிட்ட பாடல்களும், மெலோடியாகவும், அதே நேரம் மிரட்டும் படியாகவும் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

படம் முழுக்க, காதல் ரசமும் தேசப் பற்றும் போதும்.. போதும்.... என சொல்லுமளவிற்கு வரும் வசனங்கள் படம் முழுக்க பரவி, விரவிக் கிடப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.


மணிரத்னத்தின் எழுத்து, இயக்கத்தில், பாக் - ஆப்கான் பார்டர் செக்போஸ்ட்டில் பாகிஸ்தான் கொடியை வெகு சாமர்த்தியமாக, கார்த்தி தப்பித்து வரும் லாரியை விட்டு ஏற்றி வீழ்த்தும் காட்சியும், விமான படை சம்பந்தப்பட்ட காட்சிகளும், காதல்களியாட்டங்கள் நிரம்பிய காதல் காட்சிகளும் "காற்று வெளியிடை.." படத்தை காண வேண்டும் மீண்டும் ஒருமுறை.. என ஆவலைத் தூண்டுகின்றன.

"காற்று வெளியிடை.." - அனைத்து தரப்பினரும் ரசிக்கும் 'தேசப்பற்று நிரம்பிய விர்ரு, விர்ரு... காதல் படை... வசூலிலும் ஜெயிக்குமா? விரைவில் தெரியும் விடை!"

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment