சுழல் காற்று மழையால் பெரியபரந்தனில் வீடுகள் சேதம்!


கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று   (10) மாலை 3.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடுமையான சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் திடீரென சுழல்காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மக்களது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. மற்றும் அப்பகுதியில் காணப்படும் வாழை, பப்பாசி போன்ற பயன் தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்த வேளை வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்ட போது வீடுகளில் வசித்தவர்கள் குழந்தைகள் சிறுவர்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றமையால் பாரிய காயங்கள்  உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும் சிலருக்கு கூரைத் தகரம் வெட்டிச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மழையுடன் சுழல் காற்றும் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் ஏற்பட்ட இடி மன்னலுடன் கூடிய சுழல் காற்று மழையால் 4 நிரந்தர வீடுகளும் 6 தற்காலிக வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றில் நிரந்தர வீடுகளின் கூரைச் சீற் ஓடு  கூரை மரம் என்பன தூக்கி வீசப்பட்டுப் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்காலிக வீடுகளின் கூரைத் தகரங்கள் தூக்கி வீசப்பட்டு முழுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளன.மற்றும் பெரியபரந்தன் நெற்களஞ்சியக் கட்டிடத்தின் கூரையும் சுழல் காற்றினால்தூக்கி வீசப்பட்டுச் சேதத்திற்குள்ளாகிக் காணப்படுகின்றது.

இப்பகுதியில் கடந்த ஏழு வருட காலமாக நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டகைகளில் வசிப்பவர்களின் வாழ்விடங்கள் சுழல் காற்று மழையினால் தூக்கிவீசப்பட்டு முழுமையான சேதமடைந்துள்ளமையால் அவர்கள் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி அவலப்படுகின்றார்கள்.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment