எஸ்.எழில் இயக்கத்தில், 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' பேனரில், உதயநிதி ஸ்டாலின், தயாரித்து நாயகராக நடித்தும் வெளி வந்திருக்கும் படம் தான் "சரவணன் இருக்க பயமேன்".
முழுக்க, முழுக்க காமெடியை மட்டுமே நம்பி, எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், உதயநிதி ஸ்டாலினுடன், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி, யோகி பாபு, சாம்ஸ், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ரவி மரியா, ரோபோ ஷங்கர், சிந்து, ரிஷா.. உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.. என்பது மேலும் சிறப்பு.
"சரவணன் இருக்க பயமேன்" படத்தின் கதைப்படி, இரண்டு நெருங்கிய குடும்பகளின் செல்லங்களான சரவணன் - உதயநிதியும், தேன்மொழி - ரெஜினாவும் சின்ன வயதில் எதிரும் புதிருமாக வாழும் சண்டைக்காரர்கள்.
இடையில் வளரும் பருவத்தில் பெற்றோரின் வேலை நிமித்தமாக பிரியும் இருவரும் அப்படிபிரியும் போது, "நான் இந்த ஊர் திரும்பும்போது, நீ மாடோ, பன்றியோ... தான் மேய்ப்பாய்... "என நாயகியும், நான் கூடத்தான் நீ, பிச்ச எடுப்பன்னு நினைச்சேன்.. நான் அத சொன்னேனா..... என்றபடி, சிறுவயது நாயகரும் பிரிகின்றனர்.
ஆனால், பெரியவர்கள் ஆனதும் மீண்டும் சந்திக்கும் பொழுது, சரவணன், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும், தேன்மொழி அந்த அரசியல் தலையையே அசரடிக்கும் அழகியாகவும் இருக்கிறார்கள். அதனால், சிறுவயது பகை மறந்து, தேன்மொழியை லவ்வுகிறார் சரவணன்.
ஆனால், தேனோ, சிறு வயது பகையோடு சரவணனை பழி தீர்ப்பதாக கருதிக் கொண்டு, தனக்கு கொஞ்சமும் பொருந்தாத மணமகனை கல்யாணம் கட்டிக் கொள்ள, சம்மதம் சொல்லிவிடுகிறார். அதை சரவணன், தனக்கு நெருக்கமாக இருந்து, விபத்தொன்றில் இறந்து போன இளம் பெண்ணின் ஆன்மா ஒன்றின் உதவியுடன் எப்படி தடுத்து நிறுத்தி, தனக்கு பிடித்த தேன்மொழிக்கு தன்னை மிகவும் பிடிக்க வைத்து தாலி கட்டுகிறார்... என்பது தான் "சரவணன் இருக்க பயமேன்". படத்தின் கதை மொத்தமும்.
சரவணனாக, உதயநிதி ஸ்டாலின், செம கச்சிதம். சூரி யை துபாய்க்கு பிளான் பண்ணி துரத்தி விட்டு, தோ ஸிந்தகி எனும் சிக்கன் கட்சிக்கு தலைவராகி, சிக்கென்ற உடம்புக்கு சொந்தக்கார்களான, ரெஜினா கசாண்ட்ரா வுடனும், ஸ்ருஷ்டி டாங்கே வுடனும் டூயட் பாடுவதிலாகட்டும், வில்லன்களிடம் அடி வாங்குவது, அடி கொடுப்பது ஆகிய ஆக்ஷன் காட்சிகளில் ஆகட்டும், கலக்கல் காமெடி காட்சிகளிலாகட்டும் சகலத்திலும் சக்கைப்போடு போட்டிருக்கிறார். சபாஷ்!.
ரெஜினா கசாண்ட்ரா, தேன்மொழியாக கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஒரு சேரக் கலக்கியிருக்கிறார். அதிலும், உதயநிதியுடனான, அந்த பெட்ரூம் சீனிலும், "எம்புட்டு இருக்குது ஆச... " பாடல் காட்சியிலும் செமயாய் கலக்கி இருக்கிறார் கலக்கி.வாவ்!
சரவணன் - உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் காதலியாக, உதயநிதிக்கு பிரியாணி தந்து அவர் மனதில் இடம் பிடிக்க நினைக்கும் கல்லூரி மாணவியாகவும், எதிர்பாராத விபத்தால், தன் ஆசை நிராசை ஆனதால் ஆவியாக வந்து உதயநிதியின் ரெஜினா மீதான காதலுக்கு உதவும் பாத்திமாவாக, ஸ்ருஷ்டி டாங்கே செம சிறப்பு. அதிலும், "செம ஜோரு, ஜோரு என்ன நடந்துச்சு தெரியலை..." டூயட் பாடலில் உதயநிதியுடன் சிருஷ்டி, செம பியூட்டி!
உதயநிதியின், சதியால் கட்சி தலைவனாக வேண்டிய நேரத்தில், துபாய் போய் ஒட்டகம் மேய்த்து திரும்பும் ரெஜினாவின் சித்தப்பா கல்யாணம் - சூரிசூப்பர் ரீ எனும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
"வர்றது சாதாரண ஆள் இல்லடா... "எனும் உதயநிதியிடம், "பின்ன என்ன ராஜாஜிஹாலா" எனக் கலாய்பதில் தொடங்கி, "உன் லவ்வுக்கு, நீ, நாயா அலையலாம் நான, ஏன்டா பேயா அலையணும்..? என்பது மற்றும், "டெபாசிட்டே வாங்காத கட்சிக்கு இனிமேலும் இரத்தம் சிந்த முடியாது...." என்பது வரை டைமிங் காமெடி சீன்களில் சூரியையும் பீட் செய்து விடுகிறார் படத்தில் நாயகரின் காமெடி நண்பர் பாபுவாக வரும் யோகி பாபு.
ரெஜினாவுக்கு நிட்சயிக்கப்படும் 'அவசர புத்தி - ஆர்வக்கோளாறு' மாப்பிள்ளையாக சாம்ஸ், ரெஜினாவின்அப்பாவாக லிவிங்ஸ்டன், உதயநிதியின் அப்பாவாக ரைடக்டர் ராஜசேகர், சாம்ஸின் அடாவடி அப்பாவாக மன்சூர் அலிகான், அவரது முதல் மனைவியாக 'அங்காடித்தெரு 'சிந்து, கலக்கல் காமெடி நாட்டாமைகள்... சகுடேஸ்வன் - ரோபோ ஷங்கர், மகுடேஸ்வரன் - ரவி மரியா, "லாலா கடசாந்தி..."ஒத்தப் பாட்டுக்கு செம குத்து ஆட்டம் போட்டிருக்கும் ஜிகினா ஸ்ரீ-ரிஷா... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
கே.ஆனந்த லிங்க குமாரின் படத்தொகுப்பில் பெரிய குறை ஒன்றுமில்லை... முன்பாதியில். பின் பாதியில் கொஞ்சம் நீளத்தை வெட்டி தூக்கி இருக்கலாம், அவர். கே.ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு.
டி.இமானின் இசையில், "எம்புட்டு இருக்குது ஆச...", "செம ஜோரு, ஜோரு என்ன நடந்துச்சு தெரியலை...", "முனியாண்டி.. முனியாண்டி... ", "லாலா கட சாந்தி.." உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு பக்கா பலம்.
இயக்குனர் எஸ்.எழிலின் இயக்கத்தில் முழு நீளக் காமெடியையும், இன்றைய டிரண்டுக்கு ஏற்றபடி, ஒரு இளம் பெண்ணின் ஆவியையும் பெரிதாக நம்பி வந்திருக்கும் "சரவணன் இருக்க பயமேன்' படத்தில் ஒரு சில லாஜிக் குறைகள் ஆங்காங்கே காணப்பட்டாலும், முன் பாதி, கலக்கல் காமெடிக்காக இயக்குனர் எஸ்.எழிலுக்கும் நாயகர் உதயநிதிக்கும் ரசிகர்கள் நிச்சயம் கைக்கொடுக்கலாம்!
மொத்தத்தில், "சரவணன் இருக்க பயமேன்' - 'சபாஷ், சொல்ல சிலருக்கு, தயக்கமேன்..? எனக் கேட்கும் அளவிற்கு பக்கா கமர்ஷியலாக இருக்கிறது. பேஷ், பேஷ்!"

0 comments:
Post a Comment