பங்களாதேஷ் அணியுடனான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணிக்கு இமாலய வெற்றி!




இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்டதான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷ் அணிக்கு 457 எனும் இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷ் அணியை இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

காலி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

அதன்படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தாலும் அதன் பின்னர் இளம் வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் மிக நல்ல இணைப்பாட்டத்தின் துணையுடன் வலுவான நிலையை எட்டியது.

திமுத் கருணாரத்ன 30, தரங்க 4, சந்திமால் 5 என்ற நிலையில் ஆட்டம் இழந்தாலும் குசல் மெண்டிஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோரின் 196 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இலங்கை அணியை வலுப்படுத்தியது.

குசல் மெண்டிஸ் சிக்ஸர் பெறுவதற்காக முற்பட்டு அனாவசியமாக 194 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அசேல குணரத்ன 85 ஓட்டங்களையும், நிரோசன் டிக்வெல்ல அதிரடியாக 75, டில்ருவான் பெரேரா 51 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 494 ஓடடங்கள் சேர்தது.

இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்ட்டில் தனது 15 வது டெஸ்ட்டில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு தரங்காவின் சதமும், சந்திமாலின் அரைச்சதமும் கைகொடுக்க 6 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷ் அணிக்கு 457 எனும் இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய நாள் வரை விக்கெட் இழப்பின்றி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இன்றைய நாளில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றுவரையான இரு அணிகளும் மொத்தமாக 17 டெஸ்ட் ஆட்டங்களில் கலந்து கொண்டாலும் அதில் 15 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகன் விருது இலங்கையின் இளம் வீரர் குசல் மெண்டீஸுக்கு கிடைத்தது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment