யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா 13.05.2017 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவன ஆதரவில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் லயன். கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைமாணி தெ.திருவேரகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். வரவேற்புரையை யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை மாணவன் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீயும் வாழ்த்துரையை கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கத் தலைவர் நா.சோதிநாதனும் ஆற்றினர். சொல்லின் செல்வர்; இரா.செல்வவடிவேல் ஆசிரியர் ‘உள்ளுவதெல்லாம் வள்ளுவம்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு நடன நிகழ்வாக மேகிலா சிவஞானசுந்தர ஐயரின் நெறியாள்கையில் நல்லூர் சிவநர்த்தனாலய மாணவர் வழங்கிய குறள்வழி நடனம் இடம்பெற்றது. இதில் நட்டுவாங்கம் சி.மேகிலா, பாட்டு ஜெ.மதுசிகன், வயலின் கலைச்சுடர் வ.மங்கைலட்சுமி, மிருதங்கம் ம.வினோகாந் ஆகியோர் மேற்கொண்டனர்.
பல்துறை வள்ளுவம் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ தலைமையில் சிந்தனை அரங்கு நடைபெற்றது. இதில் திருவள்ளுவர் ஒரு இலக்கியவாதி என கலைப்பீட மாணவி ப.கதிர்தர்சினியும் திருவள்ளுவர் ஒரு மருத்துவர் என மருத்துவபீட மாணவன் ப.பிரதீசும் திருவள்ளுவர் ஒரு சட்டத்தரணி என சட்டத்துறை மாணவி க.துளசியும் திருவள்ளுவர் ஒரு முகாமைத்துவவாதி என வணிகத்துறை மாணவன் சி.யசோகுலனும் கருத்துரையாற்றினர். நிகழ்வின் நிறைவில் வாழ்க தமிழ் என்ற பொருளில் எஸ்ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரது நெறியாள்கையில் புத்தாக்க அரங்க இயக்கக் கலைஞர்கள் வழங்கிய நாடகம் இடம்பெற்றது.
தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் நன்றியுரை ஆற்றினார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வேல். நந்தகுமார் நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தினார்.





































0 comments:
Post a Comment